புலிகளுக்கு ஆயுதம் கடத்திய சிங்கப்பூர் வாசி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு!

November 4th, 2009 Save & Share

அமெரிக்காவிலிருந்து இலங்கையில் புலிகளுக்கு ஆயுதங்களை நடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் வர்த்தகரான பால்தேவ் நாயுடு ராகவன் (47) விசாரணைகளுக்காக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கு உதவியது மாத்திரமன்றி கடல் கடந்த பல்வேறு நாடுகளுடன் சட்டவிரோச் செயற்பாடுகளில் பால்தேவ் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிபதி ரோய் நெய்பர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு சிங்கப்பூர்வாசியான ஹனீபா ஓஸ்மான் என்பவருடன் இணைந்தே பால்தேவ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஹனீபா (57)வுக்கு பல்டிமோட் நீதிமன்றத்தினால் 37 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் பால்தேவ் நாயுடு 2006ம் ஆண்டு பெப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் தான் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்குமிடையில் இடைத் தரகராக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு இத்தோனிசியார்கள் சிலர் தனக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.