ஜனாதிபதி திருப்பதி பயணம்!

October 30th, 2009 Save & Share

ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்பதி கோவிலுக்கு நாளை செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11.00 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் வாகனம் ஒன்றில் திருப்பதி மலைக்குச் செல்வார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுகிறது.