செம்மொழி மாநாட்டுக்கு வெளிநாட்டு அறிஞர்கள், பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க நெடுமரங்கள் சில பெருமுயற்சி-கருணாநிதி!

October 27th, 2009 Save & Share

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, வெளிநாட்டு அறிஞர்கள் வர மாட்டார்கள் என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக, தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, வெளிநாட்டு தமிழறிஞர்கள் வருவது சந்தேகமே என்றும், வரப்போவதில்லை என திட்டவட்டமாகவும், வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அந்த அறிஞர்கள் தெரிவித்துவிட்டனர் எனவும், தமிழ் – ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி, அவர்கள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன், நாள்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

சீரிய செயல்கள் எதுவானாலும், அது தமிழின் வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்துக்கும் பயன்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுநரிக் கும்பல் ஒன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டமொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றிமுகடு, சிகரங்களைத் தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக் கருதியிருக்கின்றனர்.

அதற்கு அடையாளம் தான், செம்மொழி மாநாட்டுக்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள, “நெடுமரங்கள்’ சில பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றனர்.எந்தத் தமிழறிஞர் சிவத்தம்பி, மாநாட்டுக்கு வரமாட்டார் எனக் கூறுகிறார்களோ, அந்த சிவத்தம்பி, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக, முன்னதாகவே வருவதாகத் தெரிவித்திருப்பதோடு, விவாதிக்கப்பட வேண்டிய ஐந்து கருத்துக்களையும் வழங்கியிருக்கிறார். இவ்வாறு முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.