முல்லை மாவட்டத்தின் 3 பிரதேச செயலக பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கை! 25ம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்டத்திலும் சிவில் நிர்வாகம்!

September 18th, 2009 Save & Share

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார்.

இப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலும் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங்களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தியோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்களையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செயலகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக் கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற்கொள்ளுகின்றனர் என்றார்.